25.வேப்பம்பட்டு ஊராட்சியில் ஆபத்தாக உள்ள டிரான்ஸ்பார்மர்: பீதியில் பொதுமக்கள்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது 25.வேப்பம்பட்டு ஊராட்சி. சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த ஊராட்சியில், நெடுஞ்சாலையோரம் திருமண மண்டபம் அருகே டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இதன்மூலம் அப்பகுதி மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில், எப்போதும் 24 மணி நேரமும் போக்குவரத்து இருக்கும். பொதுமக்கள் பஸ் நிலையத்துக்கென சாலைக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், இந்த டிரான்ஸ்பார்மரை தாங்கி பிடிக்கும் மின் கம்பங்கள், மிகவும் பலவீனமாக உள்ளன.

மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு சில ஆண்டுகள் ஆனதால், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, எந்நேரமும் சரிந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. அவ்வழியாக செல்லும் வாகனங்கள் எதிர்பாராமல் லேசாக உரசினாலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்கள் பீதியுடனே செல்கின்றனர். எனவே, இந்த டிரான்ஸ்பார்மரின் மின் கம்பங்களை உடனடியாக மாற்றி, புதிதாக மின் கம்பங்களை அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: