சென்னை: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி கிராமத்தில் காருடன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி கிராமத்தில் நேற்று (03.03.2026) காலை சுமார் 08.30 மணியளவில் புதுவை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் TN10 BE 8935 என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்று எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை அருகிலுள்ள தனியருக்குச் சொந்தமான கிணற்றில் விழுந்து மூழ்கியதில் காரில் பயணம் செய்த சென்னை, கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா (வயது 44) த/பெ.மணி மற்றும் வினோத் (வயது 39) த/பெ. சேகர்: கொளப்பாக்கம் காந்தி தெருவைச் சேர்ந்த ஜெயமுருகன் (வயது 43) த/பெ.ஆதிகேசவன் மற்றும் மெளலிவாக்கம், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சேகர் (வயது 27) த/பெ.குமார் ஆகிய நான்கு நபர்கள் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
