பெரியகுளம்: பெரியகுளத்தில் சேதமடைந்த கால்நடை மருத்துவமனையை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே குள்ளப்புரம் கிராமம் உள்ளது. இங்குள்ள மக்கள் அதிகளவில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். கால்நடைகளுக்காக அப்பகுதியில் அரசு கால்நடை மருத்துவமனை இயங்கி வந்தது. இந்நிலையில் உரிய பராமரிப்பில்லாததால் கால்நடை மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அங்கு கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க கால்நடை மருத்துவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.