அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் திசை வேக மாறுபாடு, வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் திசை வேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் மற்றும் கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாளை(08.07.2020) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களான மதுரை, நாமக்கல், விருதுநகர், சேலம், தர்மபுரி, நீலகிரி, கோவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு பிற்பகலில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது  முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் தேவலாவில் 6 செ.மீ மழையும், கோவை மாவட்டம் வால்பாறையில் 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல் விழுப்புரம் மாவட்டம் கோலியனூர், விழுப்புரம், கடலூர் மாவட்டம் லால்பேட்டை பகுதிகளில் தலா 4 செ.மீ மழையும், கோவை மாவட்டம் சின்னக்கல்லார், சீன்கோனா, சோலையார் பகுதிகளில் தலா 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஜூலை 7(இன்று) முதல் ஜூலை 11 வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்திலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஜூலை 7(இன்று) மற்றும் ஜூலை 8ம் தேதிகளில் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்திலும், ஜூலை 9 மற்றும் ஜூலை 10ம் தேதிகளில் இதே பகுதியில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: