உப்பூர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் அருகே தீர்த்தக்கரை கடற்கரைக்கு செல்லும் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள உப்பூரில் பிரசித்தி பெற்ற  வெயிலுகந்த விநாயகர் கோயில் உள்ளது. விசேஷ நாட்களில் அருகில் உள்ள மோர்பண்ணை தீர்த்தக்கரை கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடுவார்கள். அதன்பின்னரே கோயில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். மேலும் இறந்த முன்னோர்களுக்கு கடற்கரையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்கின்றனர்.

இந்நிலையில் கடற்கரைக்கு செல்லும் சாலை, உரிய பராமரிப்பின்றி மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. ேமலும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் இருபுறமும் முட்செடிகள் வளர்ந்து நிற்கின்றன. சாலையை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதிமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: