சென்னை: தமிழகத்தில் உயிர் காக்கும் மருந்துகள் உள்ளதால் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். திருவொற்றியூர் மண்டலத்தில் மாநகராட்சி பணியாளர்களுடனான ஆலோசனை கூட்டதிற்கு பின்னர் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னை மாநகரில் 149 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 19 சுகாதார மையங்களும், 4,935 காய்ச்சல் மையங்களும் உள்ளன என குறிப்பிட்டார். இதன் மூலம் 3 லட்சத்து 36 ஆயிரத்து 836 நபர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் முன்கூட்டியே நோய் தொற்றை கண்டறிந்தால் நாம் அவர்களை நோயிலிருந்து குணப்படுத்த முடியும் என தெரிவித்தார்.