புதுடெல்லி: ஏ.சி. ரயில் பெட்டிகளில் ஆபரேஷன் தியேட்டர்களில் இருப்பது போல், இயற்கையான தூய காற்றை செலுத்தும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக ரயில், பேருந்து, கப்பல், விமானம் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள், வந்தே பாரத் சிறப்பு விமானங்கள் மூலம் வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில், ரயில்களின் ஏசி பெட்டிகளில் புதிய காற்று செலுத்தப்படுவது குறித்து ரயில்வே அதிகாரி கூறியதாவது: கடந்த மே 12ம் தேதி முதல் இயக்கப்படும் ராஜ்தானி ரயில்களில் உள்ள 15 ஏ.சி. பெட்டிகளில் புதிய காற்று சுழற்சிமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி, ஒரு மணி நேரத்துக்கு 16 முதல் 18 முறை இயற்கையான புதிய காற்று உட்செலுத்தப்படுகிறது. இதன் மூலம், 20 சதவீத புதிய காற்று உள்ளே செல்லும்.