செங்கல்பட்டு செய்யூர் எம்எல்ஏ.,வுக்கு கொரோனா தொற்று உறுதி; சிகிச்சைக்காக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி..!!

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் எம்எல்ஏ ஆர்டி அரசு, விரைவில் நலம்பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்றைய தினம் ஒரே நாளில் 3,645 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக நேற்று கொரோனா பாதிப்பு 2வது தினமாக 3 ஆயிரத்தைத் தாண்டியது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதன் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதியின் எம்எல்ஏ. ஆர்டி அரசுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், செய்யூர் எம்எல்ஏ ஆர்டி. அரசு விரைவில் நலம்பெற விழைவதாக என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், “Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கழகத்தின் செய்யூர் MLA @dr_rtarasu_ அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன். மக்கள் பணியில் அவருக்குள்ள அக்கறையும், தன்னம்பிக்கையும், தொடர்ந்து மேற்கொண்டு வரும் சிகிச்சையும் அவரை மீண்டும் வழக்கம்போல பணியாற்றச் செய்திடும்!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: