தூத்துக்குடி: கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிதியுதவியை அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார். லாக்-அப் மரணம் நிகழ்ந்தால் தமிழக அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் சம்பவத்தில் 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி அவர்களை கைது செய்த சாத்தான்குளம் போலீசார், காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு அவர்கள் மரணம் அடைந்ததாகவும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சிறையில் உயிரிழந்த வழக்கில் இடைக்கால அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சாட்சிகளிடம் நடத்திய விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்தார் கோவில்பட்டி நடுவர்மன்ற நீதிபதி. தந்தை, மகன் மரணம் குறித்து தூத்துக்குடி எஸ்.பி. நடத்திய விசாரணையின் அறிக்கையும் இன்று தாக்கல் செய்யப்பட்டது.