புதுடெல்லி: ரயில்வே நிலையங்களில் உள்ள கடைகளில் முகக்கவசம், கையுறை, சானிடைசர் உள்ளிட்ட கொரோனா தடுப்புக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் விற்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில் நிலையக் கடைகளில் பிஸ்கெட், தண்ணீர் பாட்டில், சிப்ஸ் பாக்கெட், நாளிதழ், வார இதழ்கள், புத்தகங்கள் வி்ற்பது வழக்கமாகும். தற்போது கொரோனா தொற்று காலம் என்பதால், வைரசைத் தடுப்பதற்கான அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும்படி ஒப்பந்ததாரர்தகளுக்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:பயண அவசரத்தில் பயணிகள் சில வேளை முகக்கவசம், கையுறை போன்ற கொரோனா தடுப்பு பொருட்களை வீட்டிலேயே விட்டு வர வாய்ப்புள்ளது. இதனால் அவர்களின் தேவைகளை அறிந்து கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக் கவசம், கையுறை, சானிடைசர் உள்ளிட்ட பொருட்களை அதிகபட்ச சில்லரை விலைக்கு விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.