காஷ்மீரில் தீவிரவாதிகளை களையெடுக்கும் பாதுகாப்பு படை; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; 5 பேர் கைது...தேடுதல் வேட்டை தீவிரம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தீவிரவாதிகளை களையெடுக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு சில வாரங்களில் மட்டும் தொடர்ச்சியாக இங்கு தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வடக்கு காஷ்மீரின் சோபோர் மாவட்டம் ஹர்த்சிவா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் செல்போன் இணையதள சேவை துண்டிக்கப்பட்டு, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். உயிரிழந்த தீவிரவாதிகளிடமிருந்த ஆயுதங்களை கைப்பற்றிய பாதுகாப்புபடையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை போல், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நர்பலில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் லஸ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்துள்ளனர். கைதான தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகளை கைப்பற்றிய பாதுகாப்பு படையினர் அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, தேடுதல் வேட்டையிலும் தீவிரமாக பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரு வேறு இடங்களில் 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: