திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வழியாக மீன்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், தேசிய நெடுஞசாலையில் மீன்கள் கொட்டி சிதறின. அவற்றை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர். ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து கேரளாவிற்கு மீன்களை ஏற்றி சென்ற ஈச்சர் லாரி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞசாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பச்ச குப்பம் என்ற இடத்தை கடந்தபோது அதி வேகமாக வந்து கொண்டிருந்த லாரி, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால், லாரியில் இருந்த பெட்டிகள் அனைத்தும் சாலையில் விழுந்து, அதிலிருந்த மீன்கள் சாலை முழுவதும் சிதறின. இதனை கண்ட சக வாகன ஓட்டிகளும், அப்பகுதி பொதுமக்களும் மீன்களை அள்ளிச்செல்ல குவிந்தனர்.