புதுடெல்லி: பேரிடர் காலங்களில் மாநிலங்களுக்கு உதவ தேசிய பேரிடர் நிவாரண நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த நிதியம் ஏற்படுத்தப்பட்டு சுமார் 15 ஆண்டுகள் ஆகின்றன. இது உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இந்த நிதியத்திற்கு பட்ஜெட்டில் இருந்து குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படும். ஆனால், தனிநபர்கள், நிறுவனங்கள் பங்களிப்பு வழங்குவது குறித்து முறையாக முடிவு எடுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு தனிநபர்களும், நிறுவனங்களும் நன்கொடை வழங்க மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. இதனால், தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு இனி மேல்் யார் வேண்டுமானாலும் நன்கொடை வழங்க முடியும்.