சென்னிமலை: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கொடுமணல் கிராமத்தில் சுமார் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால் பல கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வந்தது. தற்போது, தமிழக தொல்லியல் துறையின் திட்ட இயக்குநர் ஜெ.ரஞ்சித் தலைமையில் உதவி தொல்லியலாளர் நந்தகுமார் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கொடுமணலில் கடந்த ஒரு மாதமாக அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில், சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்படுத்திய கல்லறைகள் மற்றும் கருவிகள், அணிகலன்கள் தயார் செய்த தொழிற்சாலைகள் இருந்ததற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தொல்லியல் துறை திட்ட இயக்குநர் ஜெ.ரஞ்சித் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:இந்த அகழாய்வு பணியில் சுமார் 250 இடங்களில் கல்லறைகள் (பெருங்கற்கால ஈமச்சின்னம்) இருந்ததற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு கல்லறையை சுற்றிலும் பெரிய அளவிலான கற்கள் வட்டமாக வைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு கல்லறையை நாங்கள் தோண்டி ஆய்வு செய்தபோது 6 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் மற்றும் 1 மீட்டர் ஆழத்தில் முற்றத்துடன் கூடிய 2 அறைகளாக பிரிக்கப்பட்டு இருந்தது.