லடாக் மோதலில் இந்திய வீரர்களின் உயிர்த் தியாகம் வீண்போகாது என விமானப்படை தளபதி பேச்சு: சீனாவுக்கு பதிலடி கொடுப்போம் எனவும் சூளுரை!!

ஹைதராபாத் : லடாக் மோதலில் வீரமரணம் அடைந்தவர்களின் தியாகம் வீண் போகாது என்று கூறியுள்ள விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா, சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று சூளுரைத்துள்ளார். ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை தளத்தில், பயிற்சி முடித்த வீரர்களுக்கான நிறைவு விழா நடைபெற்றது. இதில் விமானப்படை வீரர்கள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் பல்வேறு சாகசங்களை செய்து காட்டினர்.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா, லடாக் மோதலில் வீரமரணம் அடைந்தவர்களின் தியாகம் வீண் போகாது என்றார். சீனாவின் நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிய அவர், எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க விமானப்படை தயாராக உள்ளதாகவும்  கூறினார். லடாக் மோதலை தொடர்ந்து விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா, காஷ்மீர் மற்றும் லே எல்லைப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்திவிட்டு திரும்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லடாக் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அங்கு இந்திய விமானப்படை , போர் விமானங்கள் மற்றும் வீரர்களை எடுத்துச் செல்லும் ஹெலிகாப்டர்களை குவித்துள்ளது.

Related Stories: