10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

கோபி : 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தனியார் பள்ளிகள் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் குறித்து அரசு கண்காணித்து வருகிறது. அதற்காக தனி அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். தனியார் பள்ளி மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு முடிவுகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்களில் முறைகேடு செய்ய முடியாது.

அதையும் மீறி மதிப்பெண் பட்டியலில் குளறுபடி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறைபாடுகள் சுட்டி காட்டப்பட்டால், உடனடியாக குழு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும். காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வை எழுத வைப்பது ஆசிரியர்கள் கடமை. தற்போது, மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என ஆசிரியர்கள் கூறுவதற்கு என்ன பதில் கூறுவது? என தெரியவில்லை.  இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Related Stories: