பெங்களூரு : தமிழகத்தை சேர்ந்த தேயிலை தோட்ட கூலி தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பெங்களூருவில் சிக்கி தவித்ததை அறிந்த தினகரன் நாளிதழ் ஊழியர்கள் கர்நாடகா மற்றும் தமிழக அதிகாரிகள் உதவியுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் இருப்பதால் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்து, சிக்கமகளூருவில் இருந்து 4 குழந்தைகள் உள்பட 29 பேர் பெங்களூரு வந்தனர். இங்கிருந்து கர்நாடகா-தமிழக எல்லையில்் உள்ள அத்திபள்ளி வழியாக தமிழகம் செல்ல முடியாமல் இரவு நேரத்தில் பசியும் பட்டினியுமாக பெங்களூரு கெம்பேகவுடா பஸ் நிலையத்தில் தவித்து வந்தனர்.
இதுகுறித்து ஓசூர் தாசில்தார் வெங்கடேசன் கூறும்போது, ‘‘கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணியை தொடர்ந்து ஒரு வாரமாக மேற்கொண்டு வருகிறோம். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வழிகாட்டுதல்படி பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் தொழிலாளர்கள் எந்த சிரமமும் இல்லாமல் ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதையேற்று செயல்படுத்தி வருகிறோம். இன்று (நேற்று) பெங்களூருவில் இருந்து வந்த தொழிலாளர்களை அரசு பேருந்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம். இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரிடம் பேசி அனுமதி பெற்ற பின் அனுப்பியுள்ளோம். மனித நேய அடிப்படையில் இந்த பணியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்’’ என்றார்.