புதுடெல்லி: 10 மற்றும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வது பற்றி சி.பி.எஸ்.இ நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று அறிவுறுத்தியுள்ளது. கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் நடத்த இருந்த பொதுத் தேர்வுகளை ரத்து செய்துள்ளது. ஆனால் சி.பி.எஸ்.இ நிர்வாகம் நிலுவையிலுள்ள பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் மற்றும் இதர பிற தேர்வுகளை வரும் ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் மாணவர்களின் பாதுக்காப்பு நலனை அடிப்படையாக கொண்டு தமிழகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ததை மேற்கோள்காட்டி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.