கூடுவாஞ்சேரி அருகே டாஸ்மாக் பார் ஊழியர் கொலை: மர்மநபர்களுக்கு வலை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே பார் ஊழியரை கொலை செய்துவிட்டு, தப்பிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வண்டலூர் அருகே ஓட்டேரி விரிவு பகுதியில் வண்டலூர் - மீஞ்சூர் வெளி வட்ட சாலை மேம்பாலம் உள்ளது. இதன் கீழ்பகுதியில், அடுத்தடுத்து 3 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஓட்டேரி விரிவு பகுதியில் ரயில்வே தண்டவாளம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை அருகில் சுமார் 36 வயது வாலிபர் சடலம் கிடப்பதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வண்டலூர் டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு, முதுகு, கை, கால், கழுத்து உள்பட உடல் முழுவதும் பல இடங்களில் வெட்டு காயங்களுடன் சடலம் கிடந்தது.

இதையடுத்து சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், சடலமாக கிடந்தவர் ராமநாதபுரம் மாவட்டம், தேவகோட்டை தாலுகா, கீழ்மருதகுளம் கிராமத்தை சேர்ந்த ராமநாதன் (36). இவரது மனைவி உஷா. அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 3 மாதங்களாக டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை செய்தார் என தெரிந்தது. தொடர்ந்து போலீசார், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததா அல்லது வேறு காரணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.

Related Stories: