சிதம்பரம்: உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மற்றும் மார்கழி மாதங்களில் தேரோட்டம் மற்றும் தரிசன விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக்கோரி சிதம்பரம் நடராஜர் கோயிலை சேர்ந்த பாஸ்கர தீட்சிதர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் இதுவரை அதன் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதையடுத்து தரிசன விழாவை ஊரடங்கு காரணமாக கோயிலுக்குள்ளேயே நடத்த தீட்சிதர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு ஆனி திருமஞ்சன தரிசன விழா வருகிற 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்றிலிருந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 27ம் தேதி நடைபெற வேண்டும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கோயிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் தேரோட்டம் நடப்பதற்கு வாய்ப்பில்லை.