நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பொது முடக்கம் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு வருமானம் இன்றி தவித்து வரும் நிலையில் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டி தனியார் பள்ளிகள் வற்புறுத்தி வருவதால் பெற்றோர்கள் விழிபிதுங்கி உள்ளனர். பொதுமுடக்கம் காரணமாக வருவாய் இன்றி பலரும் தவித்து வரும் நிலையில், இந்த மாத இறுதிக்குள் கல்வி கட்டணத்தை கட்டியே ஆக வேண்டும் என தனியார் பள்ளிகள் குறுஞ்செய்தி அனுப்பி இருப்பது பெற்றோருக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இதுகுறித்து அங்குள்ள மக்கள் தெரிவித்ததாவது, கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலரும் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் தங்களை தொடர்பு கொண்டு கல்வி கட்டணத்தை செலுத்த வற்புறுத்துகின்றனர்.