பொள்ளாச்சி போல் மீண்டும் ஒரு கொடூரம்: ராமநாதபுரத்தில் பெண்களை கடத்தி ஆபாச படம் எடுத்து மிரட்டும் கும்பல் கைது!

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாசமாக படம் எடுத்து நகை, பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். போகலூர், பரமக்குடி, சத்ரகுடி உள்ளிட்ட பகுதிகளில் இளம் பெண்கள், கணவனை பிரிந்து வாழும் பெண்களை பின்தொடரும் கும்பல், அவர்களுடன் பேசி பழகி பின்னர் தங்கள் வலையில் வீழ்த்தியுள்ளனர். அந்த பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போல் செல்போனில் படம் எடுத்து பின்னர் அதனை காட்டி கூட்டு பாலியல் வன்முறையிலும் ஈடுபட்டுள்ளனர். தங்களது ஆசைக்கு இணங்க மறுக்கும் பெண்களை காரில் கடத்தி சென்று ஆபாசமாக படம் எடுத்தும் இந்த கும்பல் மிரட்டி வந்துள்ளது. தொடர்ந்து, காட்டுப்பகுதிகளில் முயல், மயில்களை வேட்டையாடுவதும் பின்னர் போதை ஏற்றிக்கொண்டு தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்களை மிரட்டி கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபடுவதையும் இந்த கும்பல் கடந்த மூன்று ஆண்டுகளாக செய்து வந்துள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் செல்போன் எண்களை வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அதே பகுதிகளை சேர்ந்த முகமத் சீதக்காதி, தனசேகர், விஷ்ணு, செழியன், சேதுபாண்டியன் மற்றும் காளிதாஸ் ஆகிய 6 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொள்ளாச்சி, நாகர்கோவிலை தொடர்ந்து ராமநாதபுரத்தில் நடைபெற்றுள்ள இந்த பாலியல் வன்முறை அப்பகுதியில் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories: