டோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், நேற்று மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 34. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து தற்போது போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.இந்தி டி.வி தொடர்கள் மூலம் நடிப்புலகில் நுழைந்தவர், சுஷாந்த் சிங் ராஜ்புத். பீகாரை சேர்ந்த இவர், இன்ஜினியரிங் படித்தவர். ‘தேஷ் மே ஹே மேரா தில்’ என்ற தொடரில் அறிமுகமானார். 2009ல் ‘பவித்ர ரிஷ்தா’ என்ற தொடர் மூலம் பிரபலமானார். இந்த தொடர் அவருக்கு விருதுகள் பெற்று தந்தது. 2013ல் எழுத்தாளர் சேத்தன் பகத் எழுதிய திரீ மிஸ்டேக்ஸ் ஆப் மை லைப் என்ற புத்தகத்தின் திரைப்பட வடிவமான கை போ சே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ஷுத் தேஸி ரொமான்ஸ், டிடெக்டிவ் பியோம்கேஷ் பாக்‌ஷி ஆகிய படங்கள் மூலம் பாலிவுட்டின் முக்கிய நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார். ஆமிர் கானின் பிகே படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

2016ல் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான எம்.எஸ்.டோனி தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற படம் சுஷாந்த் சிங்கை இந்தியாவிலுள்ள அனைத்து மொழி படவுலகிலும் பிரபலமடைய வைத்தது. கடைசியாக அவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம், சிச்சோரே. தி பால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் என்ற ஆங்கில நாவலை தழுவிஉருவாக்கப்பட்ட தில் பெச்சாரா என்ற படத்தில் சுஷாந்த் சிங் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இப்படம், கடந்த மே 8ம் தேதி ரிலீசாக இருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் நேற்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டிலிருந்த வேலைக்காரர் அவரது சடலத்தை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக சுஷாந்த் சிங் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

அவரது திடீர் தற்கொலை தகவலை அறிந்த இந்திய படவுலகினர் மற்றும் விளையாட்டு வீரர்கள் பேரதிர்ச்சி அடைந்து இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே நடிகர்கள் இர்பான் கான், ரிஷிகபூர் ஆகியோரை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ள பாலிவுட், தற்போது சுஷாந்த் சிங்கை இழந்து மேலும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ரெஹா சக்ரவர்த்தி என்பவரை சுஷாந்த் காதலித்தார். கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் இவர்கள் பிரிந்தனர்.  சில தினங்களுக்கு முன் சுஷாந்தின் முன்னாள் மேனேஜர் திஷா சலியன், 14வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. சுஷாந்தின் சகோதரர் நீரஜ்குமார், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இப்போது பாஜவில் எம்எல்ஏவாக இருக்கிறார். இவரது மனைவி கவுன்சிலராக இருக்கிறார்.

கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்

நடிகர் சுஷாந்த் சிங் மறைவுக்கு இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னணி வீரர்கள் ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, முன்னாள் நட்சத்திரங்கள் சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். திரையுலகினர் பேரதிர்ச்சி பாலிவுட் பிரபலங்கள் ஷாருக் கான், சல்மான் கான், அபிஷேக் பச்சன், பர்கான் அக்தர், சோனாக்‌ஷி சின்கா, விவேக் ஓபராய் ஆகியோரும் ட்விட்டரில் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

Related Stories: