கோவை: கொரோனா தாக்கத்திற்கு மத்தியில் கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை இல்லாத அளவு பிரசவங்கள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் கர்ப்பிணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனையும், கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையிலும் வசூலிக்கப்படுகிறது. இதை தவிர, பிரசவ செலவுகளும் அதிகம். ஏற்கனவே ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த சமயத்தில் கை கொடுத்தது அரசு மருத்துவமனைகள் தான். கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் பிரசவம் நடந்துள்ளது.