புதுடெல்லி: எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில், ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு வரும் 16ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி 2017ல் பதவி ஏற்றதும், பிப். 18ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்தார். அவர் மீது அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இருப்பினும், எடப்பாடி பழனிசாமி அரசு தீர்மானத்தில் வெற்றி பெற்றது. அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், சபாநாயகர் இந்த விவகாரத்தில் ஒரு இறுதி முடிவை எடுப்பார். அவருக்கு நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என கடந்த பிப்.4ம் தேதி வழக்கை முடித்து வைத்தது.