சென்னை: ஐ.என்.டி.யூ.சி தலைவர் ஜி.காளன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இந்திய தேசிய தொழிலாளர் சங்க காங்கிரசின் (ஐ.என்.டி.யூ.சி) தமிழகத் தலைவருமான ஜி.காளன் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமுற்றேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தொழிலாளர்களின் நலனுக்காகப் போராடும் சிறந்த தொழிற்சங்க தலைவரான ஜி.காளன், எத்தகைய சிக்கலான பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காணும் அனுபவம் மிக்கவர்.
தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிங்காரரத்தினசபாபதி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘கலைஞர், பேராசிரியரின் பேரன்பைப் பெற்ற சிங்கார ரத்தினசபாபதி உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு வேதனைக்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். முத்தமிழறிஞரின் பிறந்த நாளில் துவங்கப்பட்ட மின்வாரியத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவராக, பொதுச்செயலாளராகப் பணியாற்றிய சிங்கார ரத்தினசபாபதி அவர்கள், மின்வாரிய ஊழியர்களின் நலன்களுக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். மின்வாரிய ஊழியர்களுக்காகவும், திமுகவுக்கும் பாடுபட்ட அவரை இழந்து தவிக்கும் இந்த நேரத்தில் - அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், மின் வாரிய தொ.மு.ச. ஊழியர்களுக்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் ’ என தனது இரங்கல் செய்தியில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.