உத்தரபிரதேசத்துக்கு 1600 புலம்பெயர் தொழிலாளர்களை ரயிலில் அழைத்து வந்த பிரியங்கா காந்தி

லக்னோ: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா உத்தரபிரதேச மாநில பொறுப்பாளராக இருந்து கட்சி வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார். பொது முடக்கத்தால் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் பல மாநிலங்களில் சிக்கி தவித்தனர். அவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்காக பிரியங்கா காந்தி ஏற்கனவே 1000 பஸ்களை ஏற்பாடு செய்தார்.

 

ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களை உத்தரபிரதேசத்துக்கு அழைத்து வந்தார். ஆனால் அந்த பஸ்களை மாநில அரசு உள்ளே அனுமதிக்காமல் பிரச்சனையை உருவாக்கியது. இந்த நிலையில் மும்பையில் சிக்கி தவித்த 1600 புலம்பெயர் தொழிலாளர்களை பிரியங்கா தனி ரயிலில் உத்தரபிரதேசத்துக்கு அழைத்து வந்துள்ளார். மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் 1600 தொழிலாளர்களையும் அழைத்துவர சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்தார். பின்னர் அந்த ரயில் அவர்களை ஏற்றிக்கொண்டு உத்தரபிரதேசம் வந்தடைந்தது.

இதுசம்பந்தமாக மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் சூரஜ்சிங் கூறுகையில், உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள் மீட்டுவர பிரியங்கா காந்தி தொடர்ந்து முயற்சித்து வந்தார். அதன்படி இப்போது 1600 புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வந்துள்ளோம். ஏற்கனவே பஸ்சில் அழைத்து வந்தபோது பிரச்சனையை உருவாக்கினார்கள். இதனால் தான் சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்து அழைத்து வந்தோம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: