நாளை நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து; 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு...!

சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது உள்ள நிலையில் கொரோனா தொற்று சென்னையிலும், சில மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் தொற்று வல்லுநர்கள், நோய் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, பெற்றோர்களின் கோரிக்கையையும், நோய் தொற்றின் தற்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு, மாணவர்களை நோய் தொற்றிலிருந்து காக்க, வருகின்ற 15-ம் தேதி முதல் நடைபெறவிருந்த 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளும், 11-ம் வகுப்புக்கான விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

எனவே, இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80% மதிப்பெண்களும், மாணவர்களின் வருகை பதிவின் அடிப்படையில் 20% மதிப்பெண்களும் வழங்கப்படும். 12-ம் வகுப்பு தேர்வைப் பொறுத்தவரையில், ஏற்கனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படவிருந்த மறு தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. சூழ்நிலைக் கேற்ப 12-ம் வகுப்பு மறுதேர்வுகளுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ததற்கு மாணவர்கள், அனைத்து கட்சியினர் சார்பில் மனப்பூர்வமான வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். 10-ம் வகுப்பு மாணவர்கள் அனவைரும் ஆல்பாஸ் என்ற அறவித்திருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது.

அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையை முதல்வர் ஏற்றுக்கொண்டதால் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது. முன்கூட்டியே இம்முடிவை எடுத்திருந்தால் பதற்றத்தை தவிர்த்திருக்கலாம். இனி கவனச் சிதறல்களில் ஈடுபடாமல் முழுமையாக கொரோனா தடுப்பில் அரசு ஈடுபட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: