சித்ரதுர்கா: கர்நாடக அமைச்சர் ராமுலு, ஊரடங்கை மீறி ஆயிரக்கணக்கான மக்களுடன் பிரமாண்ட ஊர்வலம் நடத்தியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் 5ம் கட்டமாக கொரோனா ஊரடங்கை நீடித்திருந்தாலும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சமூக இடைவெளி பின்பற்றுதல், கூட்டம் கூடக் கூடாது, கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் போன்றவை அமலில் உள்ளன. இந்நிலையில், இம்மாநில மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் ராமுலு, நேற்று சித்ரதுர்கா மாவட்டம், செல்லகேரே தாலுகா, பரசுராம்புரம் பகுதியில் உள்ள வேதவதி நதியில் சர்ப்பண பூஜை செய்ய வந்தார். அவரை ஆயிரக்கணக்கான பாஜ தொண்டர்கள், ஆதரவாளர்கள், அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.