ஊரடங்கு தளர்வு எதிரொலி பழநி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் துவக்கம்

பழநி: ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டதன் எதிரொலியாக பழநி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் துவங்கி உள்ளன. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தியிருக்க வேண்டும். இதன்படி 2018ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்கும். ஆனால், நடத்தப்படவில்லை. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையின் அடிப்படையில் கடந்த நவம்பர் மாத இறுதியில் கும்பாபிஷேக பணிக்கான பாலாலய பூஜை நடந்தது.

தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் துவங்கிய நிலையில் கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கால் 70 நாட்களுக்கு மேலாக பணிகள் தடைபட்டது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளதால் தற்போது மீண்டும் பணிகள் துவங்கி உள்ளது. முதற்கட்டமாக மலைக்கோயில் ராஜகோபுரத்தில் உள்ள சிதலமடைந்த சிற்பங்களை சீரமைத்து, புதிய வர்ணங்கள் பூசப்பட உள்ளன. இதற்காக தற்போது ராஜகோபுரத்தை சுற்றிலும் சாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேக நடைபெற வேண்டிய காலம் தாண்டி 2 வருடங்கள் ஆகிவிட்டதால் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென பக்தர்களும், ஆன்மீகவாதிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: