காற்றுத் திறன் (Wind Power) அல்லது காற்று மின்சாரம் (Wind Electricity) என்பது காற்றிலிருந்து மின்னாற்றலைப் பெறுவதைக் குறிக்கின்றது. அதாவது, காற்றுச் சுழலிகளைப் பயன்படுத்தி காற்றிலிருந்து மின்னாற்றலை உற்பத்தி செய்யும் முறையாகும். பெரிய காற்றாலைப் பண்ணைகளில் நூற்றுக்கணக்கான தனித்தனிக் காற்றுச் சுழலிகள் மின்திறன் செலுத்தல் தொகுதிகளில் (Power transmission module) இணைக்கப்படுவதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஏனைய ஆற்றல் முறைகளுடன் ஒப்பிடும்போது காற்று ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் பெறப்படுவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசடைதல் பெருமளவில் தடுக்கப்படுகின்றது. எனினும், காற்று மின்சாரத்தைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் காற்றுச் சுழலிகளுடன்கூடிய தொகுதிக்கான உற்பத்திச் செலவு அதிகமாகும். காற்றிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரம் முதலில் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான சார்ல் எப். புரூஸ் என்பவரால் 1888-ல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரால் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம் 12 கிலோவாட் நேர் ஓட்ட மின்சாரத்தை மதிப்பீடு செய்தது. 1920 நடுப்பகுதிகளில் அமெரிக்காவில் ஒன்று முதல் மூன்று கிலோவாட் காற்று மின்சாரம் பரிஸ்-டன்ஸ் போன்ற கம்பெனிகளால் அபிவிருத்தி செய்யப்பட்டது. 1956ஆம் ஆண்டில் டென்மார்க்கில் 200கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மூன்று விசிறிகளைக்கொண்ட காற்றுச்சுழலி யொகனீஸ் ஜூல் என்பவரால் உருவாக்கப்பட்டது.