சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற கைதி சிறையில் தூக்கிட்டு தற்கொலை; மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல்

சென்னை: சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற கைதி சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி பழனி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் கடந்த சில நாள்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் சிறைத் துறை சார்பில் கூறப்படுகிறது. சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடா்பாக அந்த குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக இருந்த ரவிக்குமாா், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்ளிட்ட 17 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனா். இவா்களை குண்டா் தடுப்பு காவல் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 5-ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையா் உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ஆம் தேதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டள்ள 17 போ் மீதான குண்டா் சட்டத்தை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவா்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. குற்றம்சாட்டப்பட்ட 17 பேரில் பாபு என்பவா் சிறையிலேயே உயிரிழந்துவிட்டாா்.

வழக்கை விசாரித்த மகளிா் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 15 பேரை குற்றவாளிகளிகளாக தீர்ப்பளித்து தோட்டகாரரான குணசேகரை விடுதலை செய்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்திருந்தார். அவர்களில் பழனி உள்ளிட்ட 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த கைதி பழனி, இன்று தற்கொலை செய்துகொண்டார். தனது லுங்கியால் சிறையில் உள்ள அறையில் தூக்கு போட்டு இறந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories: