வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டியில் புறக்காவல் நிலையம் அடிக்கடி பூட்டப்பட்டு கிடக்கிறது. எனவே, நிரந்தர காவல்நிலையம் இப்பகுதியில் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டியில் அடிக்கடி சாதி மோதல் ஏற்பட்டு வந்தது. இதனால் உயிரிழப்பு மட்டுமின்றி பலர் வீடுகள் உள்ளிட்ட உடமைகளை இழந்தனர். இதனையடுத்து பிரச்னை ஏற்பட்ட நாட்களில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஒரு மாதம் கழித்து படிப்படியாக போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்படும். மீண்டும் மோதல் ஏற்பட்டால் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்படுவார்கள். புதுப்பட்டி வத்திராயிருப்பு காவல் நிலையத்தைச் சேர்ந்த ஊராகும். 10 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நின்று பஸ்ஏறி செல்வதற்காக இருந்த கட்டிடம் புறக்காவல் நிலையமாக மாற்றப்பட்டது. அங்கு எஸ்.ஐ, போலீசார் 24 மணி நேரம் படியில் இருந்து வந்தனர். நாளடைவில் இந்த புறக்காவல் நிலையத்தில் 4 போலீசார் வரை இருப்பதோடு ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.