வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கடந்த 4ந்தேதி கத்திரி வெயில் தொடங்கியது.  இதனை அடுத்து தொடர்ந்து அனல் வாட்டி வந்தது. கடந்த சில நாட்களாக கடலூர், நாகை, சேலம், தஞ்சை, திருச்சி, திருத்தணி, தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட பல நகரங்களில் வெயில் 100 டிகிரியை (பாரன்ஹீட் அளவு) கடந்தது.  சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் சென்னை விமான நிலையம் ஆகிய பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக வெப்பநிலை 100ஐ கடந்து பதிவானது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக, இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், தி.மலை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்து உள்ளது. எனினும், மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு மற்றும் வேலூர் 5 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்.  5 மாவட்டங்களில் 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும்.  அதனால், வெளியே வருவதை தவிர்க்க வேண்டுமென பொதுமக்களை கேட்டு கொண்டு உள்ளது.

Related Stories: