நாமக்கல்: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் சாலைகளில் நடந்தும், டூவீலர்களில் சுற்றித்திரியும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதுமாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததை அடுத்து பொது போக்குவரத்து தவிர, மற்ற வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கல்வி நிறுவனங்கள், மால்கள், சினிமா தியேட்டர்கள், கோயில்கள் தவிர, தொழிற்சாலைகள், வர்த்தக கடைகள், சந்தைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கைகளை கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கழுவ வேண்டும்.பொதுமக்கள் முககவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு ₹100 அபராதம் விதிக்க கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார். நகராட்சி அதிகாரிகள், போலீசார் வாகன சோதனையின் போது முககவசம் அணியாமல் வருபவர்களை பிடித்து ₹100 அபராதம் விதித்து வருகின்றனர். விதிமுறை மீறி தேவையின்றி சாலையில் சுற்றித்திரிபவர்கள் மீது வழக்குபதிவு செய்வதுடன், வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தும் வருகின்றனர்.முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே பங்க்குகளில் வானங்களுக்கு பெட்ரோல், கடைகளில் மளிகை பொருட்கள், காய்கறிகள் விற்பனை என ஆரம்பத்தில் கட்டுப்படுத்தினர். ஆனால் நாளடைவில் அது கண்துடைப்பாக மாறிப்போனது.