சென்னை: தமிழ் திரைப்பட தாயாரிப்பாளர் சங்க தேர்தலை வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிறப்பு அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2019 ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடைந்ததால் , பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளரான என்.சேகர் தனி அதிகாரியாக தமிழக வணிகவரித்துறை நியமித்தது. இதையடுத்து, தனி அதிகாரியின் நியமன உத்தரவை ரத்து செய்யக் கோரி தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தனி அதிகாரியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது.