நெல்லை: கடந்த 57 நாட்களுக்கும் மேல் ரயில் இயங்காததால் ரயில் பயணிகள் ஏற்கனவே எடுத்த சீசன் டிக்கெட் முன் பணத்தை திரும்ப தரவேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். கொரோனா தொற்று பரவல் தடுப்பதற்காக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே புலம்பெயரும் தொழிலாளர்களுக்காக மாநிலங்களுக்கு இடையே முக்கிய வழித்தடத்தில் சிறப்பு சேவை ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வருகிற ஜூன் 1ம் தேதி முதல் ஏசி அல்லாத 200 சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளியூர்களிலிருந்து வேலைக்கு செல்லும் பலர் 3 மாதம் முதல் 6 மாத வரை சீசன் டிக்கெட்டுகளை லட்சக்கணக்கான பயணிகள் முன்னதாகவே எடுத்து வைத்துக் கொள்வது வழக்கம். பலர் டிக்கெட் எடுத்து சில நாட்கள் மட்டுமே பயணம் செய்த நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.