காய்கறி வியாபாரி அடித்து கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், கைலாசநாதர் கோயில் தெருவில் உள்ள பாழடைந்த வீட்டில் 5க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் தங்கியிருந்து காய்கறிகள் விற்பனை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் அனைவரும் மது அருந்திவிட்டு சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென 2 பைக்கில் வந்த 5 பேர், காய்கறி வியாபாரிகளை சரமாரி பைப், உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு சென்றுவிட்டனர். இதில், சின்ன காஞ்சிபுரம் நாகலுத்து மேடு பகுதியை சேர்ந்த ரஜினி (35) என்கிற சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவரது நண்பர் நொண்டி முனியாண்டி (47) படுகாயம் அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த நொண்டி முனியாண்டியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரஜினியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரஜனி மீது காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன. போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

Related Stories: