சத்தியமங்கலம்: பவானிசாகரில் வீசிய பலத்த சூறாவளிக்காற்றால் மரம் முறிந்து விழுந்து 2 வீடுகள் சேதமடைந்தன. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் பல்வேறு துறையில் பணிபுரியும் பணியாளர்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பவானிசாகர் பகுதியில் பலத்த சூறாவளிக்காற்று வீசியது. காற்றின் வேகம் தாங்காமல் பவானிசாகர் பொதுப்பணித்துறை குடியிருப்பில் வசித்துவரும் மயில்சாமி, வீணா ஆகிய இருவர் குடியிருந்த வீடுகளின் மீது பழமை வாய்ந்த மரம் வேருடன் சாய்ந்து விழுந்ததில் வீட்டின் மேற்கூரை இடிந்து சேதமடைந்தது.