சாயல்குடி: ஊரடங்கால் அடைக்கப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் கடந்த 7ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டு 2 நாளில் பலரை பலி கொண்டு ஐகோர்ட் தடையால் மூடப்பட்டது. உச்சநீதிமன்ற அனுமதியையடுத்து நேற்று மீண்டும் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட்டன. இப்போது மது தனது மரணவேட்டையை மீண்டும் தொடங்கியுள்ளது. கடலாடி அருகே மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால், அவரது பாட்டியை கட்டையால் அடித்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இதுபற்றிய விவரம் வருமாறு: ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே பி.கீரந்தை கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் மகன் கார்த்திக்(30). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சந்தியாவின், பாட்டி காளியம்மாள் (75), அருகேயுள்ள கோகொண்டான் கிராமத்தில் வசித்து வந்தார்.
நேற்று கார்த்திக் மனைவியை பார்க்க கோகொண்டான் கிராமத்திலுள்ள காளியம்மாள் வீட்டிற்கு சென்றார். அப்போது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். தர மறுத்ததால் மனைவியை அடிக்க பாய்ந்த கார்த்திக்கை, மூதாட்டி காளியம்மாள் தடுத்தார். இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், அங்கு கிடந்த கட்டையால் காளியம்மாள் தலையில் பலமாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதனை பார்த்த கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இக்கொலை குறித்து சந்தியா கொடுத்த புகாரின் பேரில், இளஞ்செம்பூர் போலீசார் வழக்குப்பதிந்து, அப்பகுதியில் பதுங்கி இருந்த கார்த்திக்கை கைது செய்தனர்.
போதையில் டூவீலரில் சென்றவர் தவறி விழுந்து பலி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரியக்குடி அழகப்பா ஊரணி பகுதியை சேர்ந்த கண்ணன் (53) என்பவர் அதிகமான மதுபோதையில் தனது டூவீலரில் காரைக்குடியில் இருந்து அரியக்குடிக்கு நேற்று சென்று கொண்டிருந்தார். முனீஸ்வரன் கோயில் வளைவில் நிலைதடுமாறி அருகே இருந்த வீட்டின் காம்பவுண்ட் எல்லைக்கல் மீது மோதி விழுந்து தலையில் பலத்த அடிபட்டு அங்கேயே உயிரிழந்தார். இது குறித்து காரைக்குடி தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.