கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநில அரசுகளுக்கு அளித்த நிதியின் விவரம் மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும்: திருமாவளவன் பேட்டி

கடலூர்: கொரோனா பரவல் தடுப்பு பணிகளுக்காக மாநில அரசுகளுக்கு அளித்த நிதியின் விவரம் குறித்து மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என திருமாவளவன் கூறினார்.   விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் எம்.பி.யுமான திருமாவளவன், நேற்று கடலூரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனை சந்தித்து மனு அளித்தார். அதன்பின்னர் அவர் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தற்போதைய நிலவரம் குறித்து ஆட்சியருடன் பேசினேன். அப்போது நான் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் அளித்தேன். அதில், 100 நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக துவங்கி தொடர்ச்சியாக 50 நாட்களுக்கு வேலை வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை குறிப்பிட்டிருந்தேன்.  

சில தினங்களுக்கு முன்பு, பிரதமர் உரையாற்றும் போது இந்தியாவை உலகம் பின்பற்றுவதாக மட்டுமே கூறும் அவர் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்,  பொருளாதார இழப்புகள், மருத்துவ ரீதியிலான கட்டமைப்புகள், மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, படுக்கைகள், சுவாச கருவி எவ்வளவு வாங்கப்பட்டுள்ளது என்பது போன்றவற்றை மத்திய அரசு விளக்க வேண்டும். தமிழகத்தில் வீடு, வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும்.  இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Related Stories: