ஓமலூர்: ஊரடங்கால் வெளிமாநில வியாபாரிகள் வராததால், ஓமலூரில் உள்ள குடோன்களில் தேங்காய் அதிகளவில் தேங்கியுள்ளது. கடந்த ஒரே மாதத்தில் தேங்காய் டன்னுக்கு ₹10 ஆயிரம் விலை சரிந்து ₹26 ஆயிரத்துக்கு விற்பனையானது. சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி பகுதிகளில் தேங்காய் விவசாயம் பிரதானமாக உள்ளது. இங்கு விவசாயிகளிடம் தேங்காயை கொள்முதல் செய்து, பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் வியாபாரிகள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, கொரோனா பாதிப்பால் வெளிமாநில வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்ய முன்வரவில்லை. இதனால், ஓமலூர், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட 20 கிராமங்களில் உள்ள குடோன்களில் அதிகளவில் தேங்காய் தேங்கியுள்ளது.