மும்பை: மும்பை ஐ.ஐ.டி.யில் படித்த முன்னாள் மாணவர்கள் இந்தியாவின் முதலாவது கொரோனா வைரஸ் பரிசோதனை பஸ்சை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். கொடோய் டெக்னாலஜி ஸ்டாக் ( Kodoy Technology Stack) என்ற தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து மும்பை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் கவுன்சில், இந்த நவீன கொரோனா வைரஸ் பரிசோதனை பஸ்சை வடிவமைத்துள்ளனர். டெலிரேடியாலஜி தொழில்நுட்பம் மற்றும் வைரஸ் அறிகுறி உள்ள நபர்களிடம் தொடர்பு கொள்ளாமல் அவர்களது தொண்டைச் சளி மாதிரியை சேகரித்து பரிசோதனை செய்யும் விதமாக நவீன் தொழில்நுட்பத்துடன் இந்த பஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்சில் டிஜிடிட்டல் எக்ஸ்ரே, டெலிரேடியாலஜி கருவி, நோயாளியின் தொடர்பு இல்லாமல் அவரது தொண்டைச் சளி மாதிரியை சேகரித்து உடனடியாக ஆர்.என்.ஏ. பரிசோதனை நடத்தும் வசதிகள் உள்ளன. 384 சதுர அடி உள்பரப்பளவு கொண்ட இந்த பஸ் கடுமையான மழைக்காலத்திலும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.