கொடைக்கானல்: கொடைக்கானலில் பிளம்ஸ் சீசன் ஆரம்பித்தும் ஊரடங்கால் வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியவில்லை. உள்ளூரிலும் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையக்கூடிய பிரதான பழங்களில் பிளம்ஸ் பழமும் ஒன்று. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிளம்ஸ் அறுவடை இருக்கும். இந்த ஆண்டு மே மாத துவக்கத்தில்தான் அறுவடை துவங்கியது. விளைச்சல் ஓரளவு இருந்தும், விலை குறைவாக கிடைப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.கொடைக்கானலில் விளையக்கூடிய பிளம்ஸ் பழங்களுக்கு, வெளிமாநிலங்களில் நல்ல விலை கிடைக்கும். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால், வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்ப முடியவில்லை. ஒரு சில கேரள வியாபாரிகள் மட்டும் கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்பட்டு அவர்கள் மட்டும் பிளம்ஸ் பழங்களை வாங்கி செல்கின்றனர்.