புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பி.யுமான ராகுல் காந்தி, டிவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பல மாநிலங்கள் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளன. கொரோனாவுக்கு எதிராக போராடும் இந்த நேரத்தில், அதுவே தொழிலாளர்களின் மனித உரிமைகளை நசுக்குவதற்கும், பாதுகாப்பற்ற தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிப்பதன் மூலம் அவர்களை சுரண்டுவதற்கும், அவர்களின் குரலை ஒடுக்குவதற்கும் வழி வகுத்து விடக் கூடாது. அடிப்படை கொள்கைகளில் எந்தவொரு சமரசத்துக்கும் இடம் அளிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.