திருமங்கலம்: திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கம்பு அதிகளவில் விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான அம்மாபட்டி, மீனாட்சிபுரம், செளடார்பட்டி, கிழவனேரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கம்பு பயிரிட்டுள்ளனர். ஆடி, ஆவணி விதைத்து தைமாதத்தில் முதல்பட்டத்தினை எடுத்துள்ள நிலையில் இரண்டாம்பட்டமாக மாசியில் விதைத்து வைகாசியில் அறுவடை செய்ய உள்ளனர்.இந்த இரண்டாம்பட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலங்களில் சரிவரபணிகளை செய்யமுடியாமல் தவித்த விவசாயிகளுக்கு அரசு அறிவித்த 50 சதவித தொழிலாளர்களை கொண்டு பணி செய்யலாம் என்ற அறிவிப்பு மனநிறைவை தந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சமூக இடைவெளிவிட்டு விவசாயிகள் வயல்களில் கம்பு சாகுபடியில் தீவிரம் காட்டியுள்ளனர்.திருமங்கலம் பகுதியில் பிறபயிர்களில் நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கம்புக்கு எந்த தாக்கமும் இல்லாதது விவசாயிகளுக்கு ஆறுதலை தந்துள்ளது.