திருவனந்தபுரம்: அபுதாபி, துபாயில் இருந்து 379 மலையாளிகளுடன் நேற்று இரவு 2 விமானங்கள் கேரளா வந்தன. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, வளைகுடா உள்பட பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ளனர். கேரளாவை சேர்ந்த மலையாளிகள் மட்டும் 4.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கேரள முதல்வர் பினராய் விஜயன் பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன் எதிரொலியாக நேற்று கேரள பயணிகளை அழைத்து வர 2 விமானங்கள் அபுதாபி, துபாய்க்கு புறப்பட்டன. தொடர்ந்து நேற்று இரவு அபுதாபியில் இருந்து 179 பயணிகளுடன் ஒரு விமானம் கொச்சிக்கும், துபாயில் இருந்து 200 பயணிகளுடன் ஒரு விமானம் கோழிக்கோட்டுக்கும் வந்தன. பயணிகளை இறக்கி விட்ட பிறகு மீண்டும் அபுதாபி, துபாய்க்கு விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன.