அரக்கோணம்: கொரோனா வைரஸ் தடுக்க ஊரடங்கு காரணமாக சென்னையில் தங்கி பணியாற்றும் வடமாநிலத்தவர்கள் மற்றும் வெளிமாவட்ட மக்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் முடங்கியுள்ளனர். இதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மங்கம்மாபேட்டை பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். லாரியின் பின்பகுதி முழுவதும் மரப்பலகை அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. போலீசார் மரப்பலகையை அகற்றி பார்த்தனர். அப்போது ஒரு பெண், ஒரு கைக்குழந்தை உட்பட 50 வடமாநிலத்தவர்கள் மறைந்திருந்தது தெரியவந்தது.