ஏரல்: ஏரலில் இருந்து சூழவாய்க்கால் செல்லும் சாலையில் பாலத்தில் தடுப்பு சுவர் உடைந்து கிடப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஏரல் வழியாக வை. வடகால் பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் வரும் தண்ணீர் விவசாயத்திற்காக இப்பகுதியில் உள்ள குளங்களுக்கு செல்கிறது. ஏரலில் இருந்து சூழவாய்க்கால் செல்லும் சாலை ஓரம் வழியாக வடகால் வாய்க்கால் செல்லும் இடத்தில் ஆறுமுகமங்கலம் குளத்திற்கு தண்ணீர் செல்வதற்காக மடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வாய்க்காலில் இருந்து குளத்திற்கு பிரிகின்ற இடத்தில் மடைக்கு மேல் பாலம் உள்ளது. இந்த பாலமானது மிக பழமையானதாகவும் அகலம் குறைவாக உள்ளது. பெரிய வாகனம் செல்லும் போது இதன் தடுப்பு சுவரை உரசுவது போல் செல்ல நேரிடும். இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வழியாக சென்ற ஒரு லாரி இந்த பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்து சென்றது. அதன்பின் இந்த தடுப்பு சுவர் இன்னும் கட்டப்படாமல் அப்படியே உள்ளது.