நீலகிரி மாவட்டத்தில் 4ம் தேதி முதல் அரசு அலுவலர்கள் அனைவரும் பணிக்கு வர வேண்டும்: மாவட்ட நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியது

ஊட்டி:  நீலகிரி மாவட்டத்தில் வரும் 4ம் தேதி முதல் அனைத்து அரசு பணியாளரும் பணிக்கு வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக கடந்த மார்ச் 26ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதலில் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின், மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு மே மாதம் 3ம் தேதி வரை அமுலில் இருக்கும் என மத்திய மாநில அரசுகள் தெரிவித்தது. இதனால், கடந்த ஒன்றரை மாதங்களாக பெரும்பாலான அரசு அலுவலகங்கள் இயங்காமலேயே இருந்தது.இந்நிலையில் நாளை மறுநாள் 3ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவுபெறுகிறது. இந்நிலையில், வரும் 4ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம் போல் அனைத்து பணியாளர்களை கொண்டு இயங்கும் எனக் கூறுப்படுகிறது. மேலும், அரசு அலுவலர்கள் வந்துச் செல்ல போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இது குறித்து நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து துறைகளுக்கு அனுப்பியுள்ள அவசர சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கடந்த 26.3.2020 முதல் வரும் 3.5.2020 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் பரவல் பாதிப்பு ஏதும் இல்லாத காரணத்தினால் தமிழக அரசின் உத்தரவுப்படி வழக்கம் போல் வரும் 4ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும், அனைத்து அலுவலர்களை கொண்டு வழக்கம் ேபால் செயல்படும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 4ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவில் இருந்து தளர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: