ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் வரும் 4ம் தேதி முதல் அனைத்து அரசு பணியாளரும் பணிக்கு வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக கடந்த மார்ச் 26ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதலில் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின், மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு மே மாதம் 3ம் தேதி வரை அமுலில் இருக்கும் என மத்திய மாநில அரசுகள் தெரிவித்தது. இதனால், கடந்த ஒன்றரை மாதங்களாக பெரும்பாலான அரசு அலுவலகங்கள் இயங்காமலேயே இருந்தது.இந்நிலையில் நாளை மறுநாள் 3ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவுபெறுகிறது. இந்நிலையில், வரும் 4ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம் போல் அனைத்து பணியாளர்களை கொண்டு இயங்கும் எனக் கூறுப்படுகிறது. மேலும், அரசு அலுவலர்கள் வந்துச் செல்ல போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.